2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணியை ஆட்பதிவுத் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கி முடிப்பதே திணைக்களத்தின் இலக்காகும் என அதன் தலைமை பணிப்பாளர் ஜகத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஊடாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாடசாலை அதிபர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களைத் தாமதமின்றி ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தும் இன்னும் பெறாத, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள், திணைக்களத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகத் தொடர்புகொண்டு தமது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசியப் பரீட்சைகளுக்கு முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தச் செயற்றிட்டத்தின் பிரதான நோக்கம் என ஆட்பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
