இலங்கை மீண்டுமொரு கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் கூட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான பல அபாயகரமான அறிகுறிகள் தற்போதைய பொருளாதார நடவடிக்கைகளில் வெளிப்படையாகத் தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போதே எடுக்கப்படாவிட்டால், அடுத்தாண்டில் (2027) இலங்கை பொருளாதாரம் மீள முடியாத கடுமையான நெருக்கடிக்குள்ளாகும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி!
நாடு ஏற்கனவே கடுமையான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இந்த நிலைமையைக் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் மத்திய வங்கியும் அவசர நாணயக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
உள்நாட்டு வெளிநாட்டு நாணய சந்தையில் டொலர்களை விற்பனை செய்து ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி முயன்ற போதிலும், அதுவொரு நிலையான தீர்வு அல்ல என நிபுணர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு வரலாற்றின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், அதிலிருந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டு நிலையான வெளிநாட்டு நாணய வருமான வழிகளை (Exports & Investments) அதிகரிக்கும் உத்திகளுக்கு இலங்கை மாறவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
IMF விடுத்துள்ள 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert):
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டமொன்றை இலங்கை தற்போது நிறைவு செய்து கொண்டிருக்கும் பின்னணியிலும், நாடு மீண்டும் வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் திறனில் இலங்கை இன்னும் அதிக ஆபத்துள்ள (High Risk) மட்டத்திலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தனது புதிய ஆய்வு அறிக்கையின் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கடன் திட்டம் முடிவடையவுள்ளது. அதன் பின்னர், பொருளாதார மற்றும் வெளிநாட்டு நாணய நிர்வாகத்தை இலங்கை ஒற்றையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், அது இலங்கைக்கு மிகவும் சவாலான காலப்பகுதியாக அமையும் என்றும் நிதி நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
