இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவினம் 2025ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே மூன்றாவது மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதன் விளைவாக, தனியார் வாகனங்கள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஜனவரி 2025க்குள் நீக்கப்பட்டன.
நீண்டகாலக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய தேவையைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பல சுங்கவரி மற்றும் சுங்கவரி அல்லாத கொள்கை நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக நிலவிய கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட திரண்ட தேவையையும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
குறிப்பாக ஏப்ரல் 2025க்கு பிறகு, இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் வர்த்தக வாகனப் பிரிவுகள் இரண்டிற்குமான வாகன இறக்குமதிச் செலவினம் 2.04 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், 2018இல் பதிவுசெய்யப்பட்ட 2.12 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2.09 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றுக்குப் பிறகு, இது மூன்றாவது மிக உயர்ந்த வருடாந்திர வாகன இறக்குமதிச் செலவினமாகவும் கருதப்படுகிறது.

Post a Comment