ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்கும் நோக்கில் சிங்கப்பூர் அரசு தனது பொது அலுவலகங்களில் குளிரூட்டிகளின் வெப்பநிலையை குறைந்தபட்சம் 25°C ஆக உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரின் நவீனமயமாக்கலில் குளிரூட்டிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. "வெப்பமண்டல பகுதிகளில் மக்களின் வாழ்க்கையையே மாற்றியது குளிரூட்டி தான்" என்று சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
அரச ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க அவர் எடுத்த முதல் நடவடிக்கை அலுவலகங்களில் குளிரூட்டிகளைப் பொருத்துவதாகும். ஆனால், இன்றைய எரிபொருள் நெருக்கடி அந்த நீண்டகால வழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி:
குளிரூட்டிகளின் வெப்பநிலையை ஒரு பாகை உயர்த்துவது ஒட்டுமொத்த மின்சாரத் தேவையை 10 வீத வரை குறைக்கும்.
அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமிக்க டுநுனு விளக்குகள் மற்றும் 'ஸ்மார்ட் சென்சார்கள்' பொருத்தப்படவுள்ளன.
ஊழியர்கள் மின்விசிறிகளைப் பயன்படுத்துமாறும், எரிபொருளைச் சிக்கனப்படுத்த பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் தவிர ஏனைய ஆசிய நாடுகளும் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
தனது எரிபொருள் தேவையில் 98 வீதத்தை மத்திய கிழக்கிலிருந்தே இறக்குமதி செய்யும் பிலிப்பைன்ஸ், முதன்முதலாக 'தேசிய எரிசக்தி அவசரநிலை' பிரகடனப்படுத்தியுள்ளது. அரச அலுவலகங்களுக்கான வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து குளிரூட்டி வெப்பநிலையை 26-27°C ஆகப் பேணுமாறும், அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியா குறுகிய நேரம் குளித்தல் மற்றும் வார இறுதி நாட்களில் மட்டும் துணி துவைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்ற கடுமையான சேமிப்புப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.
சிங்கப்பூரின் மசகு எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே வருகிறது. எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், சிங்கப்பூர் இன்னும் தனது கையிருப்பு எரிபொருளைப் பயன்படுத்தவோ அல்லது முறையான பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தவோ இல்லை.
இருப்பினும், இந்த நெருக்கடியானது ஆசிய நாடுகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெட்ரோல் சிற்றூந்துகள் மற்றும் எரிவாயுவை நம்பியுள்ள வீடுகளைக் கொண்ட வளரும் நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment