கண்டி பகுதியில் அமைந்துள்ள முன்னணி பெண்கள் பாடசாலையொன்றிற்குள் வெளிநபர் ஒருவர் நுழைந்து, 9 வயதுடைய மாணவியிடம் பாலியல் சீண்டல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவி அந்த பாடசாலையில் 4ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக்குள் தனக்கு நேர்ந்த சம்பவத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸாரின் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வெளிநபர் ஒருவர் பாடசாலைக்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவர் எவ்வாறு பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் பாடசாலையில் பணியாற்றிய அனுபவமிக்க பாதுகாப்பு பணியாளர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment