2026–2027 கல்வியாண்டிற்கான சுயநிதித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உயர்கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கற்க விரும்பும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக்கூடிய கற்கை நெறிகள்:
- மருத்துவம் (MBBS)
- பல் மருத்துவம் (BDS)
- பொறியியல் (BE / B.Tech)
- மருந்தியல் (B.Pharm)
- கட்டிடக்கலை (B.Arch)
- தொழில்நுட்ப டிப்ளமோ (Diploma Level Technical Courses)
- மருந்தியல் டிப்ளமோ (Diploma in Pharmacy)
தகுதித் தேவைகள்:
- மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்: நீட் (NEET) தேர்வில் குறைந்தது 50 சதவீத பெறுபேறு மற்றும் உயர்தரப் பரீட்சையில் இயற்பியல், இரசாயனவியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தலா குறைந்தது 50 சதவீத பெறுபேறு அவசியம்.
- பொறியியல் மற்றும் தொழில்நுட்ப டிப்ளமோ: உயர்தரப் பரீட்சையில் இயற்பியல், இரசாயனவியல் மற்றும் கணிதத்தில் தலா குறைந்தது 60 சதவீதமும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
- மருந்தியல் மற்றும் மருந்தியல் டிப்ளமோ: உயர்தரப் பரீட்சையில் இயற்பியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா குறைந்தது 60 சதவீதமும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
- கட்டிடக்கலை: இந்தியாவின் நியூ டெல்லியில் உள்ள கட்டிடக்கலை சபை நிர்ணயித்த திறனறிவுத் தேர்வில் கட்டாயம் சித்தியடைய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மாணவர்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவில் அலுவலக வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பெறும்போது, கல்விச் சான்றிதழ்கள் (சாதாரண தரம் மற்றும் உயர்தரம்) மற்றும் பிறப்புச் சான்றிதழின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட பிரதிகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆதார ஆவணங்களை 2026 ஜூலை 24 ஆம் திகதிக்குள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
