உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய இந்த மாத இறுதியில் நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஜூலை மாதம் நடைமுறைக்கு வரவுள்ள வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்தின் போது பேருந்து கட்டணங்கள் 20% வரையில் அதிகரிக்கக் கூடும் என்றும், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயைத் தாண்டுவது உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது இதனை தெரிவித்த அவர், பேருந்து கட்டணத்தை உடனடியாக உயர்த்துவதற்கு அரசாங்கம் இணங்காததால், பேருந்து உரிமையாளர்களின் நஷ்டத்தைக் குறைக்கும் நோக்கில் நாளாந்த பயணக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவுள்ளது.
இதன்படி, அலுவலக நேரங்கள் மற்றும் பாடசாலை நேரங்களிலான பேருந்து சேவைகள் எவ்வித மாற்றமுமின்றி வழமை போல் தொடரும்.
எனினும், பயணிகள் நடமாட்டம் குறைவாகக் காணப்படும் இடைப்பட்ட நேரங்களிலான பயண வாரங்கள் குறைக்கப்படும்.
மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கு இது குறித்த விபரங்கள் எழுத்துப்பூர்வமாக இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளன.
சீரற்ற காலநிலை மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளமை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா போன்ற பல பகுதிகளில் தற்போது பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், டீசல் தட்டுப்பாடு மற்றும் நஷ்டம் காரணமாக ஏற்கனவே 20% முதல் 25% வரையான தனியார் பேருந்துகள் சேவைகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளன.
பிரதான வீதிகளில் பேருந்துகள் ஓடினாலும், கிராமப்புற வீதிகளிலேயே இந்தச் சேவை குறைப்பு அதிகமாகக் காணப்படும்.
இதனால் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவர். அவர்கள் மாற்று வழியான முச்சக்கர வண்டியை பயன்படுத்த நேரிட்டால் ஒரு கிலோமீற்றருக்கு 150 முதல் 200 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும்.
பேருந்துகளை முற்றாக நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு நிறுத்தினால் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பணியை விட்டுச் சென்றுவிடுவர்.
பின்னர் மீண்டும் ஊழியர்களைத் திரட்டுவது மிகப்பெரிய சவாலாக மாறும்.
எனவே, ஊழியர்களைத் தக்கவைத்துக்கொண்டு நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்த பின்னர், அதற்குப் பொருத்தமான இறுதி முடிவை ஜூலை மாத வருடாந்த கட்டணத் திருத்தத்தின் போது சங்கம் எடுக்கும் என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
