தென்னிலங்கையில் வீட்டில் இருந்த படியே இணையம் ஊடாக வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதாக
பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிட்டு, பெண்ணிடம் இருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் விமானப்படை அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் பண்டாரகம பகுதிகளில் வசிக்கும், 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிரிய பகுதியில் வசிக்கும் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த மோசடியின் பிரதான சந்தேக நபர் பெலியத்த பகுதியைச் சேர்ந்தவராகும். மோசடிக்கு உள்ளான பெண்ணை இணையவழியாக சந்தேக நபர் தொடர்பு கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக அவருக்கு வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு பல மாதங்களாகக் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரதான சந்தேக நபரால் பெறப்பட்ட பணத்தில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய், இரத்மலானை விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.அதற்மைய, அந்த விமானப்படை அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் பெண்களைப் பெருமளவில் ஏமாற்றி வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மோசடிகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
