இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ வாகனப் பதிவு எண்களுக்குப் பதிலாக, தரநிலைகள் இல்லாத மற்றும் வெவ்வேறு வண்ணமயமான வாகனப் பதிவு எண்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீரா ஊடகங்களுக்கு விசேட கருத்தொன்றை வெளியிடும் போதே இந்த அவசர உத்தரவை அறிவித்துள்ளார்.
தற்காலிக அவகாசம் நிறைவு:
இது குறித்து அவர் மேலும் விபரிக்கையில், கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கடுமையான வாகனப் பதிவு இலக்கத் தகடுகளுக்கான தட்டுப்பாடு காரணமாக, வாகன உரிமையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தது.
அந்த இக்கட்டான காலகட்டத்தில், வாகனங்களின் வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைக் கொண்டு (தேவையேற்படின் ஒரு ஏ4 தாளில் கூட) தற்காலிகமாக வாகனப் பதிவு எண்ணைக் காட்சிப்படுத்தப் பொலிஸ் திணைக்களத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
வண்ணமயமான எண்களுக்கு அனுமதியில்லை:
இருப்பினும், இந்தத் தற்காலிக சலுகையைப் பயன்படுத்தி வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனப் பதிவு எண்களை வெவ்வேறு வண்ணங்களில், தங்களுக்குப் பிடித்தமான நிறங்களில் வண்ணம் பூசி, வடிவமைத்து காட்சிப்படுத்துவதற்கு எவ்வித அனுமதியும் ஒருபோதும் வழங்கப்படவில்லை என அவர் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முறையான தரநிலைகள் மற்றும் சட்ட விதிகள் இல்லாமல், தன்னிச்சையான முறையில் வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட வாகன எண் அட்டைகளைக் கொண்டு வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை தீவிரமாக ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய வாகனங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு எதிராக உடனடியாகத் தராதரமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் தற்போது அவசர அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீரா மேலும் தெரிவித்துள்ளார்.
