பெட்ரோலை விட டீசல் விலையை ஒரு குறிப்பிட்ட அளவினால் அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைப் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவியைக் கொண்டு மாற்று விகித சந்தையில் ரூபாயின் மதிப்பை வலுக்கட்டாயமாகக் கீழே கொண்டுவர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்தவுடன் நாட்டின் பொருளாதார நிலைமைகளில் ஓர் எல்லைக்குள் மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்த்தோம்.
எனினும் அந்த நிதியைச் சந்தைக்குள் விடுத்து ரூபாயின் மதிப்பை மீட்டுக்கொண்டுவர முடியாது.
நாம் செலவிடும் தொகையைக் குறைத்துக்கொள்வதன் மூலம் இறக்குமதிகள் ஓரளவு கட்டுப்பட்டு அதன் ஊடாகவே டொலர் கையிருப்பைச் சேமிக்க முடியும்.
அதன் பின்னரே மாற்று விகிதம் ஒரு நிலையான மட்டத்துக்கு வரும்.
இந்தச் செயல்முறை நடப்பதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
