கொழும்பு போர்ட் சிட்டி (Port City) கடற்கரை அரங்கில் சனிக்கிழமை (13.06.2026) நடைபெற்ற 2-வது சீனா – இலங்கை நட்புறவுக் கிண்ண டிராகன் படகு சாம்பியன்ஷிப் (Dragon Boat Race 2026) போட்டிகளில், யாழ்ப்பாணம் தீவக வலயத்திற்குட்பட்ட தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை தேசிய கானோயிங் மற்றும் கயாக்கிங் சங்கம் (NACKSL), இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரகம் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த பிரம்மாண்ட பண்பாட்டு விழாவும் படகுப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பண்பாடு மற்றும் நட்புறவை ஒளிரச் செய்யும் நோக்கில் நடைபெற்ற இந்நாடளாவிய போட்டியில்
தம்பாட்டி மாணவர்களின் இரட்டை வெற்றி :
இப்போட்டியில் தங்களின் திறமைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய யா/தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலய மாணவ, மாணவிகள் இரண்டு முக்கிய பிரிவுகளில் வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்துள்ளனர்.
இளையோர் பெண்கள் பிரிவு (18 வயதிற்குட்பட்டோர்):
நடைபெற்ற இப்போட்டியில் தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலய பெண்கள் அணி முதலிடத்தைப் பெற்று 'சாம்பியன்' (1st Place) பட்டத்தை வென்றது.
இளையோர் ஆண்கள் பிரிவு (18 வயதிற்குட்பட்டோர்):
கடுமையான போட்டிக்கு மத்தியில் தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலய ஆண்கள் அணி மூன்றாம் இடத்தைக் (3rd Place) கைப்பற்றியது. இவர்களுக்கான வெற்றிக் கேடயம் சான்றிதழ்கள் என்பன இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
குவியும் பாராட்டுக்கள்
கடின உழைப்பு, ஒற்றுமை, விடாமுயற்சி மற்றும் சிறந்த குழு ஒத்துழைப்பின் மூலம் தேசிய மட்டத்தில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தி, பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இம்மாணவர்களை திறம்பட வழிநடத்திய பயிற்றுவிப்பாளர் க.தனுசன் , உடற்கல்வி ஆசிரியர் சோ.விபுலன் , பதில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் என்றும் துணையாக நின்ற பெற்றோர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தோர்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் இதயங்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் எமது பாடசாலை dragon போட்டியில் தேசிய மட்டத்தில் சாதித்தமை குறிப்பிடத்தக்கது.



