Top News

64 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீட்டுத்திட்டம்! மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் நிலவும் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதற்காக புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.




முன்னாள் அமைச்சின் செயலாளர்கள் இருவர் மற்றும் மேலதிக செயலாளர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த நிபுணர் குழு, குறித்த வீடமைப்புத் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான பரிந்துரைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வழங்கவுள்ளது.

இந்தத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான முறையான தீர்வுகளை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கமாகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விசேட குழுவை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், 1,138 கிராமங்களில் 64,407 வீடுகளை நிர்மாணிக்கும் இலக்குடன் 2,562 வீடமைப்புத் திட்டங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டது.

இதில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் உள்ளடங்கும்.

இருப்பினும், இதுவரை சுமார் 386 கிராமங்களில் மட்டுமே வீடமைப்புத் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், 10,532 வீடுகள் மாத்திரமே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு மேலதிகமாக 11.26 பில்லியன் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையின் மூலம் இந்த வீடமைப்புத் திட்டங்களை விரைவாகவும் வெளிப்படையான முறையிலும் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post