ரஷ்ய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதால், ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருளைக் கொள்வனவு செய்யும் சாதகமான சூழல் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உடன்படிக்கைகளின் கீழ், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் நிலக்கரியை வழங்க ரஷ்யா ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதையும் அரச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான பிறகு, இலங்கைக்கு மசகு எண்ணெயை ஏற்றி வந்த முதலாவது கப்பலான ‘தேஷ் மகிமா’ (Desh Mahima) நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கப்பல் கழகத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை எடுத்து வந்துள்ளது.
இந்த எரிபொருள் கையிருப்பு சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ள நிலையில், அமெரிக்காவிலிருந்து மற்றுமொரு எரிபொருள் கப்பலும் இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

Post a Comment