அஞ்சல் ஊழியர்களில் ஒரு குழுவினர் முறையற்ற விதத்தில் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மேலதிக நேர கொடுப்பனவாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் கடந்த 2025 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர், அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜி. லனெரோல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் இறுதியில் அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமாரவினால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை விசாரணைகளின் மூலம் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
முறையான விரல் அடையாளப் பதிவு இன்றி பெருமளவிலான ஊழியர்கள் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வாகனப் பராமரிப்பு போன்ற பணிகளின் போது, தேவையற்ற ஊழியர்களின் பெயர்களைப் பட்டியலில் இணைத்தும், வேலை நேரத்தை செயற்கையாக அதிகரித்தும் நிதி கோரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அஞ்சல் ஊழியர்களின் வருகையை உறுதிப்படுத்த விரல் அடையாள இயந்திரங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அரச நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வருகைப்பதிவு மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு முறைகளில் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டியது அவசியம் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment