Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

மது பிரியர்களால் இலங்கைக்கு அடித்த பாரிய அதிர்ஷ்டம்! இத்தனை கோடியா?

 இலங்கையில் மதுபான போத்தல்களுக்குப் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் 60 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.




உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான வகைகளுக்கும் உரிய வரி அறவிடப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், மதுவரித் திணைக்களம் ஈட்டிய வருமானம் ஆண்டு வாரியாகக் கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.

இதன்படி 2025 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை 190 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இது அரசாங்கம் நிர்ணயித்த 177 பில்லியன் ரூபாய் இலக்கை விட 13.4 பில்லியன் ரூபாய் அதிகமாகும்.

இது தொடர்பில் முன்னாள் மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமவரத்ன குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டின் இதுவரையான வருமானம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் 107 சதவீதத்தைத் தாண்டியுள்ளதுடன், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றார்.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், சில மதுபான உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டத் தவறியதால், கிடைக்க வேண்டிய வரி வருமானத்தில் சுமார் 50 சதவீதம் இழக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, காவல்துறை மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சோதனைகளை தீவிரப்படுத்தி சட்டத்தை அமுல்படுத்தினர்.

இந்த ஸ்டிக்கர் முறையினால் வரி ஏய்ப்பு தடுக்கப்படுவதுடன், தரமற்ற மற்றும் போலி மதுபானங்களை நுகர்வோர் எளிதில் அடையாளம் காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 70 உரிமம் பெற்ற மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் 18 இறக்குமதியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர். உற்பத்தியாளர்களின் தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப 'Foolproof' ஸ்டிக்கர்கள் மற்றும் 'Digital Printing' ஆகிய இருமுறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) பரிந்துரைக்கமைய, இந்த ஸ்டிக்கர் முறைமை தொடர்பான புதிய செயலி (Application) ஒன்று உருவாக்கப்பட்டு, இலங்கையின் கணினி அவசர தயார்நிலை குழுவின் (CERT|CC) மேலாய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக