தற்போதைய எரிபொருள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தமது சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு முன்னனி செயலிகள் (Apps) மூலமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களான PickMe மற்றும் Uber அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பொதுமக்களுக்கான போக்குவரத்து, உணவு விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தச் சேவைகள் வகிக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவ்விரு நிறுவனங்களும், அதிகளவில் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் விநியோகப் பங்காளிகளுக்கு (Delivery Partners) கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டை (Fuel Quota) வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
வாரமொன்றுக்கு நாடு முழுவதும் மில்லியன் கணக்கான பயணங்கள் மற்றும் விநியோகங்களை இந்த செயலிகள் மேற்கொள்கின்றன.
தற்போதைய எரிபொருள் கட்டுப்பாடுகளால் ஓட்டுநர்கள் இந்த கேள்விக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த சேவைகள் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், சுற்றுலாத் துறைக்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன.
அத்துடன் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரமும் இத்தொழிலை நம்பியே உள்ளது.
தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, தேவையறிந்து எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த இந்த செயலிகள் உதவுவதாக அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மார்ச் 21 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தமையை பாராட்டியுள்ள PickMe மற்றும் Uber நிறுவனங்கள், தமது கூட்டறிக்கையில் "அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தமையை ஒரு சாதகமான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்.
இருப்பினும், நாடு முழுவதும் அத்தியாவசியப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களின் பங்களிப்பை நோக்கும்போது, இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை. எனவே, செயலி ஊடாகப் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்கவும், சாரதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், குறித்த சேவைகளை நம்பியிருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் முடியும் என நாங்கள் நம்புகிறோம்." என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment