நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் சாத்தியம் நிலவுகிறது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், இதன்போது மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க திறந்த வெளிகளில் தங்காமல் இருப்பதும், மரங்களின் கீழ் தஞ்சமடையாமல் இருப்பதும், மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதும் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment