Top News

எரிபொருள் விலையில் மாற்றம்? இந்திய முறையை கையாள போகிறதாக இலங்கை!

 உலக சந்தையில் எரிபொருள் விலை அதிரடியாக உயரும் போது, உள்நாட்டில் விலையை நிலைப்படுத்துவதற்காக இந்தியா பின்பற்றும் வரி திருத்த முறையை இலங்கையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.




இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், 
இந்தியா தனது எரிபொருள் வரியைக் குறைத்தது உடனடி விலைக்குறைப்புக்காக மட்டுமல்ல, மாறாக, உலகளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் விலை மாற்றங்களின் போது சந்தையை நிலைப்படுத்தவும், மேலதிக விலையேற்றங்களைத் தடுத்து நிறுத்தவுமே ஆகும்.

இலங்கை முன்னோக்கிச் செல்லும் போது, அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நிதிக் கட்டுப்பாடு என்பது முக்கியமானதொன்றாகும்.
எனினும், இந்தியாவின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் போல், அதிகப்படியான வரிச் சுமைகளைக் குறைப்பது முதலீடுகளை ஊக்குவிக்கவும், மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்து நீண்டகால பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கவும் உதவும்.

இலங்கைக்கு 38 ஆயிரம் தொன் எரிபொருளை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நெருக்கடியான காலங்களில் அத்தியாவசியப் பொருள்கள் முதல் பொருளாதார உதவிகள் வரை வழங்கியதன் மூலம், இந்தியா இலங்கையின் முதன்மைத் தோழனாகத் திகழ்கின்றது.
இது இந்தியாவின் அயலகத்திற்கு முன்னுரிமை கொள்கையின் உண்மையான பிரதிபலிப்பாகும். பிராந்தியத்தின் நலனுக்காக நாடுகள் மூலோபாயப் பங்காளிகளாக இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post