இந்தியாவின் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம், அடூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி , அடகு வைத்த தனது 5 பவுன் தங்க நகையைத் திருப்பிக் கொண்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
பேருந்தில் இருந்து இறங்கியபோது, தனது கைப்பையிலிருந்த நகையைக் காணாமல் திடுக்கிட்ட அவர், சக பெண் பயணிகள் யாரோ அதனைத் திருடியிருப்பதை உணர்ந்துள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட அவர், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தனக்குத் தெரிந்த நபரின் உதவியுடன் பேருந்தைப் பின்தொடர்ந்து சினிமா பாணியில் துரத்திச் சென்றார்.
தன்னுடன் பேருந்தில் வந்த மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து செல்வதைக் கண்ட மூதாட்டி, அவர்களை மறிக்க முயன்றார்.
அப்போது அந்தப் பெண்கள் தப்பியோட முயலவே, மூதாட்டி கூச்சலிட்டுப் பொதுமக்களின் உதவியை நாடினார்.
பொதுமக்கள் அந்த மூன்று பெண்களையும் துரத்திப் பிடித்துப் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் தென்காசியைச் 35,38 மற்றும் 42 வயதுடைய பெண்கள் என்பது தெரியவந்தது.
மூதாட்டியின் சமயோசித புத்தியால் திருடப்பட்ட 5 பவுன் நகை மீட்கப்பட்டதுடன், மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment