Top News

ரணகளமாகும் மத்திய கிழக்கு! இஸ்ரேல் மண்ணில் விழுந்த ஈரான் ஏவுகணைகள்! குவைத், டுபாய்க்குப் பரவும் போர்!

 மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் இப்போது கட்டுக்கடங்காத ஒரு மாபெரும் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை காலமும் வான்வெளியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஏவுகணைகள், இப்போது முதன்முறையாக இஸ்ரேலின் மையப்பகுதிகளில் நேரடியாக விழுந்து வெடிக்கத் தொடங்கியுள்ளன. அதேநேரம், போர் இப்போது இஸ்ரேல் - ஈரான் எல்லையைத் தாண்டி குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வரை பரவியிருப்பது ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.




இஸ்ரேல் வான்பாதுகாப்பு உடைப்பு - மையப்பகுதியில் ஏவுகணைகள்!
அல் ஜசீரா (Al Jazeera) மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள 'பிரேக்கிங்' தகவலின்படி, ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்பு முறைமைகளை (Iron Dome) மீறி, இஸ்ரேலின் மையப்பகுதியிலுள்ள (Central Israel) இரண்டு இடங்களில் நேரடியாக விழுந்து வெடித்துள்ளன.

இன்று விடியற்காலையில் இருந்து ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் ஈரான் ஏவுகணைகளைப் பொழிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் ஹைஃபா (Haifa) ஆகிய கடற்கரை நகரங்களில் சைரன் சத்தங்கள் ஓய்ந்தபாடில்லை. அவசரக்கால மீட்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!
விசயம் இஸ்ரேலுடன் மட்டும் நின்றுபோகவில்லை! குவைத் சர்வதேச விமான நிலையத்தை (Kuwait International Airport) இலக்கு வைத்து ஒரு 'ட்ரோன்' தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் விமான நிலையப் பணியாளர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதுடன், பயணிகள் கட்டடம் (Passenger building) சேதமடைந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அவசரக்கால நடைமுறைகளின் கீழ் விமான நிலையம் இப்போது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் சிவிலியன் இலக்குகள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் போர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைக் காட்டுகிறது.

டுபாயில் கரும்புகை - ஈரானுக்குள் புகுந்த இஸ்ரேல்!
இன்னொரு அதிர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் (Dubai) நகரில் உள்ள புகழ்பெற்ற 'பாம் ஐலண்ட்' (Palm Island) பகுதியில் பாரிய தீ மற்றும் புகைமூட்டம் காணப்படுவதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. இதுவும் ஏவுகணைத் தாக்குதலா அல்லது விபத்தா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்தப் பக்கம் இஸ்ரேல் சும்மா இருக்கவில்லை. "எங்கிருந்து ஏவுகணைகள் ஏவப்படுகிறதோ, அங்கேயே சென்று அடிப்போம்" என அறிவித்த இஸ்ரேலிய வான்படை, ஈரானுக்குள் புகுந்து அங்கிருக்கும் ஏவுகணை ஏவுதளங்கள் (Missile launchers) மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

டிரம்ப் விடுத்த "சரணடையுங்கள்" என்ற எச்சரிக்கைக்கு ஈரான் அஞ்சவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. 125 ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலை அதிரவைத்த ஈரான், இப்போது வளைகுடா நாடுகளையும் போருக்குள் இழுத்துவிட்டுள்ளது. அமெரிக்கா இனி எடுக்கப்போகும் முடிவுதான் உலகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும்.

Post a Comment

Previous Post Next Post