பரீட்சை முடிந்ததும் பாடசாலைக்கு வண்ணம் பூசிய மாணவர்கள் – சமூகப் பொறுப்பை வெளிப்படுத்திய சிறப்பான முன்முயற்சி
கிளி / அக்கராயன் மகாவித்தியாலயம்
2025/2026 கல்வியாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இன்று நிறைவு செய்த கிளி / அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாராட்டத்தக்க செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
பொதுவாக பரீட்சை முடிந்த பின்னர் ஓய்வெடுக்க அல்லது கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாக இருக்கும் நிலையில், இம்மாணவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பாடசாலை கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாடசாலை வளாகத்தை அழகுபடுத்தும் நோக்கில் மாணவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டனர்.
இந்த செயற்பாடு மாணவர்களின் பாடசாலையின் மீது கொண்டுள்ள பற்று, பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
“எண்ணங்கள் நல்லபடி அமைந்தால் வாழ்வும் வண்ணங்களாகவே மிளிரும்” என்ற சிந்தனையை நடைமுறையில் காட்டிய இம்மாணவர்களின் முயற்சி மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைகிறது.
இத்தகைய தன்னார்வ சேவைகள் மாணவர்களின் ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் முக்கியமான செயல்பாடுகளாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment