தாயக எழுச்சிப் பாடலை செம்மைப்படுத்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சனின் வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில் சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சொல்லிசைப் பாடகரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில்17ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்து வழக்கு இன்று (12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதேவேளை கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை நேற்றைய தினம் (11) நடைபெற்றது.
அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன், சொல்லிசை கலைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சாவகச்சேரி காவல்துறையினர் முற்படுத்தும் போது தாக்கல் செய்த B அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்கள் சிலதை குறிப்பிட்டு , கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகும், அது பாரதூரமான நீதி புரள்வு என மன்றில் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்மனு தாரர்களான, சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட குற்ற விசாரணை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதனை விரைவில் அனுப்புமாறும், அறிவித்தல் திரும்பும் திகதியை இன்றைய தினமாக குறிப்பிட வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதியை அறிவித்தல் திரும்பும் திகதியாக மன்று குறிப்பிட்டு, அந்த திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
