Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

ஒவ்வொரு லீட்டர் எரிபொருளிலும் 98 ரூபாவை திருடுகிறதா அரசு? அம்பலமான உண்மை!

 உலக சந்தையில் விலை குறைந்தாலும் முன்னைய விலைகளின்படி கொள்வனவு செய்யப்பட்ட பழைய எரிபொருள் கையிருப்பைக் காரணம் காட்டி, உள்நாட்டில் விலைகளைக் குறைக்க முடியாது எனத் தற்போதைய அரசாங்கம் கூறி வருவதை முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முற்றாக நிராகரித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.



​அண்மையில் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

​உண்மையான எரிபொருள் விலை என்ன?

​கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அவர், எரிபொருள் இறக்குமதியின் போது ஒருபோதும் பழைய விலைகளுக்குப் பணம் செலுத்தப்படுவதில்லை என்றும், மூன்று அல்லது ஐந்து நாட்களின் சராசரி உலக சந்தை விலையிலேயே சர்வதேச ரீதியாகப் பணம் செலுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

​உலக சந்தையின் தற்போதைய உண்மையான நிலவரப்படி, இலங்கை நாணயப்படி ஒரு லீட்டர் பெட்ரோலை ரூ. 225 க்கும், ஒரு லீட்டர் டீசலை ரூ. 246 க்கும் மக்களுக்கு தாராளமாக வழங்க முடியும் என அவர் கணக்குக் காட்டியுள்ளார். ஆனால், சந்தையில் விற்கப்படும் எஞ்சிய தொகை அனைத்தும் அரசாங்கத்தின் வரிகள் மூலமாக அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஜே.வி.பி தலைமையகத்துக்கும் செல்வதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் லீட்டர் ஒன்றிலிருந்து ரூ. 200 க்கும் அதிகமான பாரிய தொகை நுகர்வோரிடமிருந்து அநியாயமாகச் சுரண்டப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

​லீட்டருக்கு 98 ரூபாய் திருட்டு?

​எரிபொருள் கொடுக்கல் வாங்கல் மோசடி மூலம் மட்டும் ஒவ்வொரு லீட்டர் டீசலிலும் அநுரகுமார திஸாநாயக்க ரூ. 98 ஐத் திருடியுள்ளார் எனச் சாடிய அவர், இலங்கையின் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உண்மையிலேயே சுயாதீனமானது என்றால், இந்த மாபெரும் ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தத் தங்களை நேரில் அழைக்குமாறு சவால் விடுத்துள்ளார்.

​இதேபோன்று ஆதித்யா பிர்லா நிறுவனத்துடனும் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகிலேயே மிக அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் ஒரு மோசடி அரசாங்கமாக அநுரகுமாரவின் தற்போதைய அரசாங்கம் காணப்படுவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​நிலக்கரி ஊழலும் டொலர் விரயமும்:

​கடந்த ஆண்டுகளில் நாட்டின் டொலர் இருப்பு சாதகமாக இருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி காரணமாக அது மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலக்கரி மோசடியால் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை அவசரமாக ஈடுகட்ட, நாளொன்றுக்குச் சுமார் 1,200,000 லீட்டர் டீசல் அல்லது திரவ எரிபொருள் மின் உற்பத்திக்காக வீணாக எரிக்கப்படுவதாகவும், இதனால் பெருமளவு டொலர்கள் நாட்டுக்கு விரயமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​நீதிமன்ற நடவடிக்கைகள், சிறைச்சாலைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றைக் காட்டி தங்களை எக்காரணம் கொண்டும் அச்சுறுத்த முடியாது எனத் தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் நாட்டின் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிரான மிகச் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக