இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை!
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பின்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு முப்பது முதல் நாற்பது கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், கடுமையான மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைப் பலமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
