மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது தாய்நாடான லெபனான் மீதான தாக்குதல்கள் குறித்து முன்னாள் நடிகை மியா கலிஃபா வெளியிட்டுள்ள வீடியோ சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த மியா கலிஃபா, தனது தாய்நாடு சிதைக்கப்படுவதைக் கண்டு மிகுந்த வேதனையுடனும் ஆவேசத்துடனும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"எனது கண்முன்னே எனது தாய்நாடு அழிக்கப்படுவதை நான் பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ள அவர், பல தசாப்தங்களாகத் தொடரும் இந்தப் போரினால் அப்பாவி மக்களின் குடியிருப்புகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ மனைகள் இலக்கு வைக்கப்படுவதைக் கண்டு தனது இதயம் நொறுங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்தம் அமுலில் உள்ளதாகக் கூறப்படும் நிலையிலும், வெறும் 10 நிமிடங்களுக்குள் 160 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அவர் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "பல தசாப்தங்களாக ஒரு இனப்படுகொலை நமது கண்முன்னே நடப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரு பைத்தியக்காரத்தனம்.
ஒருபுறம் மக்கள் குண்டுகளைப் பரிமாறிக்கொள்ள, மறுபுறம் மனிதன் நிலவில் வாழத் திட்டமிடுகிறான். ஆனால் இங்கு ஒரு இறையாண்மை கொண்ட தேசம் அழிக்கப்படுவதை உலகம் வேடிக்கை பார்க்கிறது" எனச் சாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை 'பாசிச நாடுகள்' என விமர்சித்துள்ள அவர், இது பயங்கரவாதத்தை விட மோசமான செயல் என்றும், இதற்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மியா கலிஃபா, "நான் என்றும் லெபனானுடன் நிற்பேன்" என உருக்கமாகக் கூறியுள்ளார். அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் அவர் முன்வைத்துள்ள இந்த துணிச்சலான கருத்துக்கள் தற்போது சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Post a Comment