ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமான பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சுகாதாரம், நீர்வழங்கல், மின்சாரம், சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கல் துறைகளுக்கு இந்த விடுமுறை விலக்களிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாடசாலை, நீதிமன்றம், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்த விடுமுறை தினம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏனைய நான்கு நாட்களில் பணிக்கு அழைக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்க நிறுவன தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதனை தனியார் துறையினரும் பின்பற்றுவற்கு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றுலா, விவசாயம், சுகாதாரம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு எரிபொருளுக்குத் தேவையான பணத்தின் அளவு மதிப்பிடப்பட்டு, அதற்கேற்ப கூடுதல் எரிபொருள் ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment