மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள மாபெரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் மீதான இந்த இராணுவ நடவடிக்கையானது இன்னும் நான்கு வாரங்களுக்கு (4 Weeks) எவ்வித ஓய்வுமின்றித் தொடரும் என அவர் சற்றுமுன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
நான்கு வார காலக்கெடுவும் துரித நகர்வுகளும்
பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) பத்திரிகைக்கு அவர் அளித்த பிரத்தியேக செவ்வியொன்றில், "இது எப்போதுமே நான்கு வாரங்களுக்கான ஒரு திட்டமாகவே இருந்துள்ளது. ஈரான் எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரி, இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் நாங்கள் நான்கு வாரங்களில் அல்லது அதற்கும் குறைவான காலப்பகுதியிலேயே முடித்துவிடுவோம்" என ஈரானுக்கு கடுமையானதொரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
ஈரானின் அதியுயர் தலைவர் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டத் தளபதிகளைக் கொன்றொழித்துள்ள அமெரிக்கா, தற்போது தாம் திட்டமிட்டதை விடவும் மிக வேகமாக (Ahead of schedule) இலக்குகளை அடைந்து வருவதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"எமது இலக்குகள் அனைத்தையும் அடையும் வரை இந்தத் தாக்குதல்கள் முழு வேகத்தில் தொடரும். நாங்கள் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை" எனத் தெரிவித்து தனது 'Truth Social' சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆயினும், அமெரிக்கா அடையத் துடிக்கும் அந்த "மிக முக்கியமான இலக்குகள்" எவை என்பதை அவர் பகிரங்கமாகத் வெளிப்படுத்தவில்லை.
உயிரிழப்புகள் குறித்தான வெளிப்படையான ஒப்புதல்
இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில், அமெரிக்க மக்களுக்கு கசப்பான உண்மையொன்றையும் டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
"எமது தரப்பில் 3 வீரர்கள் பலியாகியுள்ளனர். இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் (More casualties) என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், இறுதியில் இது ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மாபெரும் நன்மையாகவே அமையும்" என அவர் 'NBC' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்கப் படைகளுக்குள் மேலதிக இழப்புகள் ஏற்பட்டாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது என்பதையே டிரம்ப் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
ரகசியப் பேச்சுவார்த்தைகளும் ஈரானின் தாமதமும்
இத்தனை அழிவுகளுக்கும் மத்தியில், ஈரானிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் தற்போது 'ரகசியப் பேச்சுவார்த்தைகளில்' ஈடுபட்டுள்ளார்கள் என்ற மாபெரும் உண்மையையும் டிரம்ப் கசியவிட்டுள்ளார்.
"அவர்கள் தற்போது என்னுடன் பேச விரும்புகின்றார்கள். ஆனால், இதனை அவர்கள் கடந்த வாரமே செய்திருக்க வேண்டும், இப்போது அல்ல. அவர்கள் மிகவும் தாமதித்துவிட்டார்கள்" எனத் தனக்கே உரித்தான பாணியில் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

Post a Comment