பயாகல பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முயன்ற டொப் கார் தொடருந்தில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தியலகொட பால கட்டுமானத் திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள், போலகம, ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரணசிங்க ஆராச்சிலாக் பசிந்து சுபுன் ரணசிங்க (திட்ட நிர்வாக அதிகாரி) மற்றும் 28 வயதான ஆய்வக தொழில்நுட்ப அதிகாரி கருணாரத்ன முதியன்செலாகே விஹங்க ருக்ஷன் பண்டார கருணாரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது வாடகை வண்டியின் ஓட்டுநரான புலத்சிங்கள, பரகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான தெடிகமுவகே குஷான் பிரதீப் படுகாயமடைந்த நிலையில் களுத்துறை நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை கடந்த 23ஆம் திகதி காலை களுத்துறை நாகொட போதனா மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி கே.டி. விராத் பரத் முன்னிலையில் நடத்தப்பட்டது.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி தொடருந்தின் ஓட்டுநர், பேருவளை பங்களாவத்தையைச் சேர்ந்த 52 வயதான கொஸ்வத்த ஆராச்சிகே டான் மகேந்து மனவாசர, தனக்கு 26 வருட சேவை அனுபவம் இருப்பதாகவும், தான் ஓட்டி வந்தபோது சிவப்பு நிற டொப் கார் காலி சாலையில் தொடருந்து பாதைக்கு இணையாக பயணித்ததை கவனித்ததாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கார் திடீரென பாதுகாப்பற்ற கடவையில் செலுத்த முயன்றதாகவும், தொடருந்து ஹாரனை அடித்து அவசரகால பிரேக்குகளை பயன்படுத்திய போதிலும் விபத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கார் தொடருந்தில் மோதி சுமார் 420 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று காலை 8.41 மணியளவில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது அப்பகுதிவாசிகள் வாகனத்தின் கதவுகளை உடைத்து சிக்கியிருந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
👉 உங்கள் கருத்தை comment செய்யுங்கள்
👉 இந்த செய்தியை share செய்யுங்கள்

Post a Comment