Top News

நாட்டை இன்னுமொரு பாரிய அனர்த்தம் தாக்குமா? முக்கிய அறிவிப்பு!

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.



இதன் காரணமாக சுங்காவில, லங்காபுரவிலிருந்து சோமாவதிய வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, நேற்று காலை முதல் இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இந்த வீதி மூடப்படும் என பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகெட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளையும் விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் வடக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post